தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது – ஜனாதிபதி!

0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையினையும் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தின் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களை உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்டதை போன்று கொரோனா தொற்றினையும் வெற்றிகொள்வோம் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எத்தகைய இக்கட்டான நிலைமையிலும் நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படமாட்டாதெனவும், அத்தகைய நிலைமைக்கு தாம் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நியாயமான உரிமைகளுக்காக செய்யப்படும் போராட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை புதிதாக கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிக்கு சர்வதேச தொழிலாளர் தின பிராத்தனைகள் பலமாக அமைய வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.