நாடளாவிய ரீதியில் பயணத்தடை தளர்த்தப்பட்டது – கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்!

0

நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒவ்வொருநாளும் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்குமென  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணாக இருக்குமானால், இன்று, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 21, 23, 25, 27, 29, 31 ஆகிய திகதிகளில் வெளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2, 4, 6, 8, பூச்சியம் என்ற இரட்டை எண்ணாக இருக்குமானால், நாளை மற்றும் 20, 22, 24, 26,28,30 ஆகிய இரட்டை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.

இந்த முறைமையை மீறுகின்றவர்கள் கைது செய்யப்படுவார்களென அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையும் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.