நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர் இந்தியாவிலுள்ள இலங்கை மாணவர்கள்!

0

இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இவ்வாறு நாளைய தினம்(வியாழக்கிழமை) அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 443 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த அனைவரையும் 4 கட்டங்களாக இலங்கைக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் முதல்கட்டமாக, பாகிஸ்தானின் லாஹுர் மற்றும் கராச்சியிலிருந்த 113 மாணவர்கள் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனை அடுத்து, இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள 101 மாணவர்கள் நாளைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

யூ.எல் 146 எனும் இலக்க விமானத்தில் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், மூன்றாம் கட்டமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் தங்கியுள்ள 117 மாணவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

குறித்த மாணவர்கள், யூ.எல் 194 எனும் இலக்க விமானத்தில் நாளை மறுதினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதே தினத்தில் யூ.எல் 1425 எனும் இலக்க விமானத்தில் நேபாளத்தின் காத்மண்டுவில் தங்கியுள்ள 93 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.