நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கையை நிராகரித்த கூட்டணிக்கட்சிகள்

0

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்வைத்த யோசனையை அரசாங்கத்தில் இருந்து விலகிய பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சிகள் நிராகரித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடாக நாமல் ராஜபக்ச இந்த யோசனையை கூட்டணிக்கட்சிகளுக்கு முன்வைத்துள்ளார்.

எனினும் வாசுதேவ நாணயக்கார ஊடாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை கட்சிகள் நிராகரித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்சவினர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது அந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நாமல் ராஜபக்சவுடன் இது தொடர்பாக எவ்வித போச்சுவார்த்தைகளையும் நடத்துவதில்லை எனவும் கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கடந்த பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட்டன.