பம்மைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விமான பயணிகள் வெளியேற்றம்!

0

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமிலிருந்து விமான  பயணிகள் இன்று(சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதற்கமைய வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு கடந்த 13ஆம் திகதி 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேயர் ஜெனரல்  ரோகித தர்மசிறி தலைமையில் அவர்கள் இன்றைய தினம் வழியனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பயணிப்பதற்காக 11 பேருந்துகள் இராணுவத்தால் தயார் செய்யப்பட்டிருந்தது.

மொனராகலை, காலி, மாத்தறை, கண்டி, கலாவத்த, மீகமுவ, புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாண்மையின மக்களும் வடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்த 9 தமிழர்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பயணிகளிற்கு கொரோனோ தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வதிவிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.