பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு குறித்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு குறித்து, இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உள்ளனர்.

இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மிகவும் பிறழ்ந்த பாதிப்பாக இருக்கலாம் என்றும் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு சவாலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிறழ்வு இலங்கையில் கண்டறியப்படவில்லை, ஆனால் இந்த பிறழ்வுகள் உலகளவில் வேகமாக பரவி வருவதால் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது என்று இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஆய்வு ஒன்றின்படி, தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சி .1.2 மாறுபாடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய கோவிட் மாறுபாடுகளையும் விட அதிகப் பரவும் தொற்றுநோயாக இருக்கலாம்.

அத்துடன் தற்போது கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளைத் தவிர்க்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவைத் தவிர, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் சி .1.2 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகையை விட சி .1.2 மிகவும் ஆபத்தானதா? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர், மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.