பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைக்கப்பட்டு தொற்றுக்கள் குறைந்து விட்டதாக காட்டப்படுகிறது என குற்றச்சாட்டு

0

இலங்கையின் கோவிட் பணிக்குழு பொறுப்பற்றது என்றும், சுகாதார தேவைகளை விட அரசியல் தேவைகளுக்காக செயல்பட்டு வருவதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுநோய் தொடர்பாக கோவிட் பணிக்குழுவால் கூட சரியான தகவல்களை சேகரிக்க முடியவில்லை. கோவிட் பணிக்குழுவுக்கு சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவரே தலைவராக இருக்க வேண்டும்.

தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் புள்ளிவிவரங்களை மறைத்து வைத்திருப்பதாக ஜனாதிபதி அண்மையில் குற்றம் சாட்டினார்.

அப்படியானால் கோவிட் பணிக்குழுவால் தொற்றுநோய் குறித்த சரியான தரவுகளை சேகரிக்க முடியவில்லை எனில் அது என்ன செய்து கொண்டிருக்கிறது?

கோவிட் பணிக்குழு பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து, நாட்டில் உண்மையான கோவிட் நிலைமையை மறைத்து வைத்திருந்தால், அது சுகாதார தேவைகளை விட அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டே செயல்படுகிறது என்று பொருள்படும்.

மூன்று நாட்களுக்கு முன்பு நாளாந்தம் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 14,000 ஆக குறைக்கப்பட்டது. நாளாந்த பி.சி.ஆர் சோதனைகளை குறைப்பதன் மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.

சுமார் 3,500 தொற்றுகள் கண்டறியப்பட்டபோது, 28,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டன. இப்போது இது 50%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றுக்கள் குறைந்து விட்டதாக காட்டப்படுகிறது.

புதிய டெல்டா மாறுபாடு மற்றும் டெல்டா பிளஸ் ஆகியவை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதால் எழுந்தமான பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் சுகாதாரத் துறையின் தலைமையிலான ஒரு கோவிட் பணிக்குழு முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

எனினும் தற்பொழுது சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆகியோர் செயல்பட முடியாதவர்களாக உள்ளனர்.

அவர்கள் பணிக்குழுவின் அரசியல் முடிவுகளை செயல்படுத்த வேண்டும் மற்றும் அதன் முடிவுகளை ஊடகங்களுக்கு முன் நியாயப்படுத்த வேண்டும் என்ற நிலையில் செயல்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.