புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி

0

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி, விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்தபெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பொதுமக்கள் பலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

இதில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பேருந்தின் நடத்துனருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர்

குறித்த நடத்துனருக்கு ஏற்கனவே பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது.

எனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை, அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தும்பளை வீதி பருத்தித்துறையை சேர்ந்த 39வயதான சந்தியாபிள்ளை சுபாஸ்பரன் என்ற பேருந்து நடத்துனருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. அவர், மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.