பொதுத்தேர்தலுக்கு எதிராக இதுவரை 10 மனுக்கள் தாக்கல்!

0

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேராசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. ஜயசுந்தர, சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சட்ட மா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.