பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும்

0

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சமர்ப்பனங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நேற்றுடன் தொடர்ந்தும் நான்கு நாட்களாக இடம்பெற்று வந்தது.

அந்தவகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசாரணையின்போது, தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

சட்டத்தரணி சரித்த குணரத்ன மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட 07 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்.ஜே.அபேசேகர மற்றும் ரட்னஜீவன் ஹூல் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் புவனெக அலுவிகார, சிசிர ஆப்ரு, பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய 05 நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்தை கூட்டப்படுவதும் அரசியலமைப்பில் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனுதாரர்கள் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.