கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்!

0

மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடம் அவர் இந்த அவசர வேண்டுகோளை இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது எமது முக்கிய நோக்கமாக கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

இதன் அடிப்படையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமையினால் எங்களுடைய தேர்தல் பரப்புரைக்குப் பதிலாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எமது மக்களின் அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்துகின்றவர்களாக இருக்கின்றோம். அந்த வகையிலே இந்த விடயத்திலும் நாங்கள் எங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

அவசரநிலைப் பிரகடனத்தில் எப்படிச் செயற்பட வேண்டுமோ அவ்வாறான நிலையைப் பின்பற்றி கிராம ரீதியாக எங்களுடைய மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில் தேர்தல் பிரசார வியூகங்களை மாற்றி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் தொண்டர்களும் முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் மத்தியில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பது தொடர்பான விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

மேலும் நாட்டில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றாடம் உழைத்து குடும்பங்களை வழி நடத்துகின்றவர்கள் இதனால் சரியான பலனை அடையவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அன்றாடம் உழைக்கின்ற அல்லது சமூர்த்திப் பயனாளிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு இச்சலுகைகள் போய்ச்சேர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தொழில் நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளது. அவர்கள் அன்றாடம் தமது குடும்ப செலவீனங்களை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.