மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் முடக்கத்தில் பயனில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

0

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால், முடக்கல் பயனுள்ளதாக இருக்காது என்று ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், கோவிட் தொற்றுக்களின் அதிகரிப்பைத் தடுக்க நாட்டை முடக்குவது மட்டுமே தீர்வு அல்ல, அதனை விட நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் முகக்கவசம் அணிவது, ஒரு மீட்டர் உடல் தூரத்தைப் பராமரித்தல் மற்றும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் முடக்கல் மட்டும் பயனுள்ளதாக இருக்காது. 

நாட்டை முடக்குவதன் மூலம் வைரஸ் பரவுவதை நிறுத்த முடியாது என்று சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினால், நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும், மக்களின் ஒத்துழைப்பு இதில் முக்கியமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலிலும் உள்ளனர். இந்தநிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உட்பட்டவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வசதியாக, தமது பங்களிப்புக்களைச் செய்யுமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் உள்ள மக்களிடமிருந்தும் வெளிநாட்டவர்களிடமிருந்தும் ஆதரவு தேவைப்படும் நேரம் இது. எனவே அருகிலுள்ள மருத்துவமனைக்குப் பங்களிப்பைச் செய்யுமாறும் இந்த முக்கியமான தருணத்தில் மக்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.