மட்டக்களப்பில் கடும் வரட்சி; 64,761 பேர் பாதிப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தில் 23,335 குடும்பங்களைச் சேர்ந்த 64,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மாவட்டச் செயலகத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்தர் ஆர்.சிவநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கைக்கு நீர் வழங்குகின்ற பிரதான குளங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.

இவற்றைவிட பொறுகாமம், கோவில்போரதீவு, பெரியபோரதீவு, வெல்லாவெளி, பழுகாமம், களுதவளை, களுவாஞ்சிகுடி, மகிளுர் போன்ற பல பகுதிகளில் அமைந்துள் சிறிய குளங்களும் வற்றியுள்ளன.

மாவட்டத்தின படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள் ளூராட்சி மன்றங்கள் ஊடாக நீர்த் தாங்கிகள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வரப்படுகின்ற போதிலும் அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் தமக்குப் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவின் பணிப்புரைக்கமைய, அனர்த்த நிவாரண சேவைப் பிரிவால், வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை அடையாளம் கண்டு, 08 பிரதேச செயலாளர்கள் ஊடாக, அப்பகுதியிலுள்ள பிரதேச சபைகளின் மூலம்,  வவுசர்களில்  குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 5.5 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.