மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளைய தினம், ஒவ்வொரு சுகாதார திணைக்கள பகுதிகளிலும் ஆபத்து அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25000 தடுப்பூசிகள் கிடைக்க உள்ளதாகவும், நாளை தொடக்கம் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மத்தியில் 36 வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரும், அவருடன் இணைந்த குழந்தையும் மரணித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கர்ப்பிணி மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது. பொதுமக்களை நிலைமையை உணர்ந்து செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.