மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி மாநிலத் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் எனக் குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி தந்தை செல்வாவின் பிறந்த தினம் மற்றும் ஏப்ரல் 26ஆம் திகதி அன்னாரின் நினைவு தினமாகும். எனினும் அன்றைய தினங்களில் கொரோனா தொற்று நிலைமையின் நிமித்தம் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இன்று இந்நிகழ்வு சிறிய அளவில் ஏற்பாடுசெய்யப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகள், சுகாதார சட்ட திட்டங்களைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியினைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.