மட்டக்களப்பில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தமிழ் பிரதேச செயலாளர்! நீதிக்கு போராடும் பெண்

0

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர் ஒருவர் தன்னிடம் இருந்து பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டதன் பின் தற்போது தன்னை அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து tell igp ஊடாக இந்த முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் தனது முறைப்பாட்டில் மேலும்,

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக பிரதேச செயலாளரொருவரை சந்தித்த எனக்கு எல்லாம் செய்து தருவதாக கூறி கடந்த 02/05/2021 அன்று என்னை பிரதேச செயலகத்திற்கு அழைத்து குறித்த பிரதேச செயலாளர்   பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டார்.

அப்போது பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பல பெண்களுடன் அவர் ஒன்றாக இருந்த வீடியோவை அவர் எனக்கு காட்டினார்.

அதில் ஒரு பெண்ணின் வீடியோ அதிகமாக இருந்தது. அந்த பெண் குறித்து விசாரித்து பார்த்ததில் அந்த பெண் குறித்த பிரதேச செயலாளரின் பிரதேச செயலகத்தில் பணி புரிபவர் என தெரியவந்தது.

இவருடைய தொழிலே இதுவாகத்தான் இருந்துள்ளது. பல பெண்களிடம் பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளார். தற்போது வாட்ஸ்அப் மூலம் என்னுடனான உரையாடல்கள் வெளிவந்ததன் பின்னர் எனக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே உள்ளன.

என்னை தேடி சில பேர் விசாரித்துச் சென்றுள்ளனர். எனக்கு பயமாக உள்ளது. இதற்கு காரணம்  பிரதேச செயலாளரே.

அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்து அதன் பிரதியை தனக்கு அனுப்புமாறு ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.

நான் அதற்கு உடன்படாத காரணத்தினால் தற்போது எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கிறார். எனக்கு பயமாக உள்ளது.

எனக்கு பாதுகாப்பு இல்லை. என்னை போன்று பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நான் பெண்கள் அமைப்பு மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  என பலரிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித பலனுமில்லை.

அனைவரும் இது விடயம் தொடர்பில் பாராமுகமாய் இருப்பதோடு எனக்கான நீதியைப் பெற்றுத் தருவதிலும் பின் நிற்கின்றனர்.  அத்துடன் என்னை சில மாதங்களுக்கு வேறு எங்கும் போய் இருக்குமாறும் பிரதேச செயலாளர் தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், தவறுகள் அனைத்தும் என் மீது இருப்பது போல தற்போது சித்தரிக்கப்பட்டு வருவதுடன் எனக்கு நீதி கிடைப்பதற்கு முட்டுக்கட்டைகளும் இட்டு வருகின்றனர்.

எனவே எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.