மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழிவும் அச்சமும் தரக்கூடிய விடயம் தொடர்பில் அறிக்கை

0

மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தில் மூழ்குவதைத் தவிர்ப்பதற்கு இந்த மாவட்டத்திலுள்ள அனைத்துத் தோணாக்களையும் தூர்வார வேண்டும் என மாவட்ட கமநல அமைப்புக்களின் தலைவர் கே.யோகவேள் தெரிவித்துள்ளார்.

பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தில் மூழ்குவது சம்பந்தமான கவன ஈர்ப்பை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

மட்டக்களப்பு மாவட்டம் பருவ மழைக் காலங்களில் வெள்ளத்தில் மூழ்வது வழமையான, அதேவேளை அழிவும் அச்சமும் தரக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.

இந்த இடர் நிலைமையை எதிர்கொள்ள ஏற்றதான நிபுணத்துவ திட்டங்களை துறைசார்ந்தவர்கள் உருவாக்க வேண்டும்.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை தொடக்கம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கிட்டங்கி வரையுள்ள தோணாக்கள் அனைத்தையும் தூர் வாரி நீர் வழிந்தோடக் கூடியதாக ஆக்க வேண்டும்.

இவ்வாறு சுமார் 30 இற்கும் மேற்பட்ட தோணாக்கள் மட்டக்களப்பு தொடங்கி கிட்டங்கி வரையிலும் எந்தவொரு காலத்திலும் பராமரிப்பு மேற்கொள்ளப்படாது காணப்படுகின்றன.

எனவே, முதன்முறையாக இப்படிப்பட்ட தோணாக்களைத் தூர்வாரி அவற்றை மழை நீர், வெள்ள நீர், கழிவு நீர் வழிந்தோடக் கூடிய வகையில் பராமரித்தால் மட்டக்களப்பு மாவட்டம் காலகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாய அழிவு தரும் நிலைமையைத் தவிர்க்க வழியேற்படும்.

இந்த விடயத்தில் அதிகாரிகளும், துறைசார்ந்த்வர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து திட்டங்களை வகுப்பது விமோசனமளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.