மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று(திங்கட்கிழமை) நண்பகல் தனது வீட்டில் இருந்து தூண்டில் மீன் பிடிக்க 35ம் கிராமத்தில் உள்ள  கன்னியெம்பை அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

35ம் கிராமம், கண்ணபுரம் கிழக்கு 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா வேலசுப்பிரமணியம் என்பவரே நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மீன்பிடிக்கச் சென்றவர் மாலை நேரமாகியும் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்கள் ஆற்றோரம் போய் தேடும் போது தூண்டில் மாத்திரம் நீரில் கிடப்பதனை கண்டு அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு தேடுதல் மேற்கொள்ள்பட்ட நிலையில் குளத்தில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.