மே தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்கிறார் தேர்தல் ஆணையாளர்!

0

மே மாத இறுதியில் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கிறது.

நாட்டின் இயல்பு வாழ்வு மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் நடத்த முடியாது போனால் ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட முடியாமல் போகலாம். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

இது விடயத்தில் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. எனினும், உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார்.

அப்படியாயின், மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தும் வாய்ப்பொன்றை அரசு எதிர்பார்க்கிறதா என எண்ண வேண்டியுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கும் உத்தரவிற்கமைய தேர்தல் ஆணைக்குழு கூடி முடிவொன்றை எடுக்கும்.

உரிய காலக்கெடு முடியும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச்சிக்கல் ஏற்படலாம். இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம். பின்னர் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.