யாழில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் சாத்தியம்- வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி

0

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியைச் சேர்ந்த நோயாளி தற்போது உடல் நலம் தேறிவந்துள்ளதுடன் அவர் மிக விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்று கூறப்படுகின்றன.

மிகுதி நோயாளிகளினது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படவில்லை. இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையைப் போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறையில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.