ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு!

0

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.50 வவுனியா புகையிரத நியைத்திலிருந்து கடுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதம் புகையிரத பாதையை  விட்டு தடம் புரண்டு  இரண்டு கிலோ மீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

இதனால் புகையிரதத்தில் பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் தடம் புரண்ட பெட்டிகளை புகையிரத பாதையில் விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.