வல்லிபுர ஆழ்வார் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

0

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்துக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

எனினும் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வழிபாடுகளில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கூடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அந்தப் பிரதேசத்துக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட 50 அடியவர்கள் என்ற அனுமதியை மீறி பல நூற்றுக்கணக்கானோர் ஆலயத்தில் கூடியிருந்தமை தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது என்றும் அவருக்கு பலர் அறிவுறுத்தல் வழங்கியும் சுவாமியை சுமந்து சென்றுள்ளார். எனவே அவ்வாறு அவருடன் இணைந்து சுவாமியை சுமந்து சென்ற 14 பேரை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.