வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164 பேர் விடுவிப்பு!

0

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164 பேர் இன்று(வியாழக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

அந்தவகையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்றைய தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய பெரியகட்டு முகாமிலிருந்து 92 பேரும், பம்பைமடு முகாமிலிருந்து 72 பேரும் என மொத்தமாக 164 பேர் அவர்களது சொந்த இடங்களான புத்தளம், காலி, மாத்தறை, களுத்துறை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.