விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

0

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வேட்பாளரோ அல்லது நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்புவதைப் போன்று முத்திரை வெளியிட முடியாது. அது சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்சவும் இந்த சம்பவத்தில் அவருடன் தொடர்புடைய நபர்களும் உனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ள ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாருக்கு இருக்கிறது.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

குற்றப்புலனாய்வுப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் இதற்கு என்ன பதிலளிப்பார் என்று கேள்வியெழுப்புகின்றோம்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தான் விரும்பியவாறு முத்திரை வெளியிடுவதற்கு நாட்டின் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதா?

இது தேர்தல் சட்ட மீறல் மாத்திரமல்ல. முற்று முழுதாக நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவால் சட்ட விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை ஆளுங்கட்சி பின்பற்றுவதில்லை. ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரே தேர்தல் சட்டங்களை மீறுகின்றார்.

தேர்தல் ஆணையாளர் இவ்வாறான விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தன்னால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் சட்டங்களை வரைமுறையின்றி ஆளுந்தரப்பினர் மாத்திரமே மீறுகின்றனர் என்பதை தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.