வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து உயிரிழப்பு – திருகோணமலையில் சம்பவம்

0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.