வேலை வாய்ப்பை பெறும் பட்டதாரிகளுக்கு முறையான பயிற்சி – ஜனாதிபதி பணிப்புரை

0

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொருத்தமானோரை தெரிவுசெய்யும்போது, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.