ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் போராட்டம்

0

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வாழ விடு வாழ விடு – நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்புவிடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, தாங்கள் அன்றாட தொழில் செய்து வரும் நிலையில், இவ்வாறு ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கூறி எங்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

குறித்த ஹர்த்தால் எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கமும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.