20 ஆவது திருத்தம் தொடர்பான புதிய வர்த்தமானி மாற்றங்களுடன் வெளியிடப்படும் – அமைச்சர் விமல்

0

புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் சில பிரச்சினைகள் தொடர்பாக நானும் மேலும் சில கட்சித் தலைவர்களும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

தற்போது வர்த்தமானி செய்யப்பட்ட 20 வது திருத்தத்தில் சில சிக்கலான பகுதிகள் உள்ளன என்பதை நாங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் பிரதமர் ஒரு குழுவை நியமித்துள்ளார்.

குறித்த குழு அறிக்கையை சமர்ப்பிபதற்கு முன்னர் 20 ஆவது திருத்தத்திற்கு தற்போது வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.