மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு வரை உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர், எல்லைக் கற்களைப் போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மை கண்டறிவதற்காக நேற்று(30) மாலை அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனபரிபாலன திணைக்களத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து வந்திருக்கின்றோம்.
தற்போதும் மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலன திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.
நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இவ்வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுடன், மக்கள் வாழ்ந்த இடங்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். வனபரிபாலன திணைக்களத்தின் ஊடாக எல்லைக் கற்கள் இடப்படும் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளும் மற்றும் வாழ்வாதார காணிகளும் காணப்படுகின்றன.
மக்கள் இங்கு பல வருட காலமாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வைத்திருப்பதுடன், பல வருட காலமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்ட ஆதாரங்களும் குடியிருப்புக்கள் காணப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன. ஒரு சிலரிடம் ஆவணங்கள் இல்லை என்பதே உண்மை.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவற்றைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனபரிபாலன திணைக்களம் போன்றன செயற்பட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நாங்கள் வனபரிபாலன திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.