சாரா புலஸ்தினியின் மரபணு மீண்டும் பொருந்தவில்லை

0

கடந்த வருடம் ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை மீண்டும் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பன அன்று இரவு நடந்தேறின.

ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரைத் தேடி முப்படையினரும் களத்தில் இறங்கியவேளை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதேவேளை, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஆபத்தான பல வெடிபொருட்கள், தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டமையைத் தொடர்ந்து இராணுவத்தினர் சந்தேகநபர்களை பிடிப்பதற்கான தேடுதலை முடக்கிவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் சிறியரக வேன்களில்வந்து இறங்கிய புதியவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்கள் குறித்த பகுதியில் கடமையாற்றும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பின்னர் குறித்த பிரதேசத்த்தை படையினர் சுற்றிவழைத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிப் பிரயோகம் பரஸ்பரம் இடம்பெற்றது. இதன்பின்னர் தாக்குதல்தாரிகள் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தனர்.

இவ்வாறு, சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 16 பேரின் உடற்பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கை (DNA) பொருந்தவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை முடிவை அறிய மீண்டும் குறித்த அறிக்கையை ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று பணித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின் தகவல்கள் பின்வருமாறு,

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னிஃமுகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும்
முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான் மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களாக, முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்) மற்றும் அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி) ஆகியோர் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களது பிரேத பரிசோதனை யாவும் கடந்த ஏப்ரல் 28, 29ஆம் திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடத்தப்பட்டிருந்தன. அதன்பின்னர் மரணமானவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019ஆம் ஆண்டு மே 2ஆம் திகதியன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

மேலும் குறித்த தாக்குதல் சம்பங்களுக்காக உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டிற்கு ஆளாகி பலரும் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு ஆஜராகி வருகின்றனர்.