அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது.

ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை அனுராதபுரம் சிறையில் 11 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.