அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – துஷார இந்துனில்!

0

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை ‘மிகவும் மோசமானவர்கள்’ என வர்ணித்தமையானது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அதிபர், ஆசிரியர் நியமனங்களில் நியாயத்துவத்தைப் பேணாமல், கல்விக்கட்டமைப்பு மிகமோசமான பாதையில் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தற்போது ஆசிரியர்களைத் தூற்றுகின்றார்கள்.

எனவே அவருடைய கருத்துத் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிடும் அதேவேளை, நாட்டின் ஆசிரியர் சமூகத்திடம் அவர் மன்னிப்புக்கோரவேண்டும்.

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வியைப் பெற்றுக்கொடுப்பதை இலக்காகக்கொண்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்த சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் வழிவந்தவர்கள் என்ற அடிப்படையில், கல்வித்துறையின் போக்கு பெரிதும் கவலையளிக்கின்றது. கல்விக்கட்டமைப்புடன் அரசியல் அபிலாஷைகள் கூட்டிணையும்போது, அக்கட்டமைப்பு முழுவதுமாகப் பாதிப்படையும்.

நாட்டின் பல்வேறு துறைகளிலும் அரசியல் ரீதியான தலையீடுகளும் தனிப்பட்ட அரசியல்நலன் நோக்கங்களும் காணப்படுகின்ற போதிலும், கல்வித்துறையில் அதனை அனுமதிக்கமுடியாது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.