அரசியல் கைதிகள் விடுதலை, தீர்வு விடயம் தொடர்பாக ஒரு மணி நேரம் பேச்சு

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தான் கையளித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும், அவருடன் இது குறித்துப் பேசுவதாகவும் பிரதமர் உறுதியளித்தார் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர் அவர்கள் சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தார்.

இதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் நேற்று பிரதமர் அவர்களிடம் கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் சுமந்திரன் அவர்களையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் அவர்கள், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அவர்களும் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.