அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தை மாற்றுமாறு கோரிக்கை

0

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தை மாற்றுமாறு திணைக்கள அல்லது நிறுவன பிரதானிகளிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர,

இவ்வாறு வேலை நேரத்தை மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (01) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா பரவல் உக்கிரமடைந்துள்ளது. பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்களும் வழமையான பாதைகளிலேயே பிரயாணிக்கும்.

எனவே அது தொடர்பில் தற்போது வேறுபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை போக்குவரத்து சேவையை எவ்வாறு பாதுகாப்பாக முன்னெடுப்பது என்பது பற்றி கல்வி அமைச்சருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டால் இரவு வேலைகளானாலும் கூட எம்மால் முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய முடியும் என்றார்.