இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்! – ஞானசார தேரர் எச்சரிக்கை

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கியுள்ளது. எம்மை குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம்.

விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர்.

வரவிருக்கும் பேரழிவிலிருந்து முழுநாட்டையும் பாதுகாக்க பொதுபலசேனா பல திட்டங்களைச் செயற்படுத்தியது. எனினும், தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.