உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் 50 சதவீத சிற்றுண்டிசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உணவு மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வால், உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான பொருட்கள் விநியோகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.