உயிர் மூச்சு உள்ளவரை தமிழரசு கட்சியினை விட்டு விலக மாட்டேன் – இரா.சாணக்கியன்!

0

தனது உயிர் மூச்சு உள்ளவரை இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆதவன் தொலைக்காட்சியின் “நேருக்கு நேர்” அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேறு கட்சிகளுடன் இணைந்து கொள்ளும் சிந்தனை தனக்கு இல்லை எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பெயர் மாற்றம் பெற்று வேறு கட்சியாக மாறுமாக இருந்தால் தான்வேறு கட்சிக்கு மாறுவேனே தவிர, அதனைத் தவிர்த்து கட்சி மாறப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தான் எதிர்காலத்தில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இணைந்த வடக்கு, கிழக்கிலேயே இது சாத்தியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை தவிர்த்து தான் அமைச்சராகவோ அல்லது இலங்கை தமிழரசு கட்சியினை விட்டு விலகுவதற்கோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இரா.சாணக்கியன், ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.