ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

0

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதி ஒன்றை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை நடமாடும் வாகனம் ஊடாக கொள்வனவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்ட செயலக அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் இந்த நிவாரண பொதிக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

அத்துடன் இந்த நிவாரண பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரும் நுகர்வோர் கொரோனா தடுப்பிற்கான சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலான காலப்பகுதியினுள் இந்த நடமாடும் பொதியை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.