கொரோனா அச்சம் – கொழும்பு துறைமுக ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்

0

கொழும்பு துறைமுகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்களையும் குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக கொவிட் செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கும் சென்றமை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மருத்துவர் உட்பட ஐந்து தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து உரிய நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தவேளை, உரிய செயற்பாடுகளுக்காக துறைமுக பணியாளர்கள் கப்பலிற்குள் சென்றனர் என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, இதனைதொடர்ந்து அவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.