தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக இலங்கைக்கு வரவில்லை -பிரசன்ன ரணதுங்க

0

புதிய கொவிட் அச்சுறுத்தலால் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாத ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என்றும், ஒமிக்ரான் புதிய கொவிட் பிறழ்வால் மேற்குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டிற்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும்.

அதற்கேற்ப சுகாதாரத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட 6 நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை.

விசா வழங்கும் போது சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.