தனிமைப்படுத்தல் ஊரடங்கு – மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கான விசேட அறிவித்தல்!

0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதேபோன்று குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்கு சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கோ மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ யாருக்கும் வாய்ப்பில்லை.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதி தடைகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி உடாக மேல் மாகாணத்திற்கு வருவதற்கும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை.

விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக அத்தியாவசிய சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுக்க செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல், மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் இந்த காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நாட்டில் பரவ ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும், பொறுப்புடனும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனை மீண்டும் நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்படுவது அவசியம்.

வைரஸ் தொற்று தொடர்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலர் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.