பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்!

0

மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழத்தின் தேசிய மலர், நேற்று இரவு மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் வகையில் இந்நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையில், தமிழீழ பூவின் உருவத்தையும், “நாங்கள் நினைவில் கொள்கிறோம்” என்ற சொற்பதம் அடங்கிய வாசகமும் ஒளிரவிடப்பட்டுள்ளது.

சுகாதார நெருக்கடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நவம்பர் 27 ஆம் திகதி எங்களால் பொது கூட்டங்களை நடத்த முடியாது என்பதால், எங்கள் மாவீரர்களை மற்றொரு வடிவத்தில் நினைவுகூர முடிவு செய்தோம்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தாயகத்தில் நினைவுகூரலைத் தடுக்கவும், எங்கள் மக்கள் உயிரிழந்த தியாகிகளை நினைவில் கொள்வதைத் தடுக்கவும் இலங்கை அரசு முயன்று வருகிறது”

“எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலையை பிரித்தானிய பொதுமக்களுக்குக் காண்பிப்பதற்கும், பிரித்தானியாவின் கொள்கைகள் தொடர்ந்து நமது சுதந்திரப் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தமிழ் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

“இது எங்கள் மக்களுக்கும் எங்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும் எங்கள் செய்தி.

நீங்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டீர்கள். தமிழர்களுக்கு நீதி, அமைதி மற்றும் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் ” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.