புர்கா மற்றும் நிகாப் தடைக்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை

0

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு வெளிநாட்டு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.

இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.