பெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!

0

கொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் க.அனிரன் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் எமது நாடு கொரோனா தொற்றினால் பாதுகாக்கப்பட்டுவருகின்றது. அது அனைவரும் அறிந்த விடயமே. இவ்வாறான விடயங்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் அதேவேளை, இதனால் அன்றாட வாழ்க்கையில் பாதிப்படைந்தவர்களும் இருக்கின்றனர்.

அந்தவகையில், பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படாமல் இருக்கின்ற நியமனங்களையும் தாண்டி தற்போது பட்டதாரிகள் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரணப் பணிகளில் கூட பங்கற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

அதேவேளை, அரசாங்கத்தினால் தற்போதைய நிலைகுறித்து பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாயும் இல்லாமல் போயுள்ளது.

இந்நிலையில் பட்டதாரிகளாகிய நாங்கள் அன்றாட தொழிலை இழந்து வீட்டில் முடங்கியிருந்து வருமானம் இன்றி குடும்பத்தினை நகர்த்த மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதேவேளை நியமனத்திற்கென்று தெரிவாகிய 45 ஆயிரத்து 845 பட்டதாரிகளிள் இருக்கின்றனர்.

இவர்களுள், இதுவரைக்கும் 23 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மாத்திரமே நியமனக் கடிதங்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன. எனவே எங்களது நிலை குறித்து அரசாங்கம் முக்கியமாக கவனஞ்செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.