மட்டக்களப்பில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கும் கொடுப்பனவு!

0

மட்டக்களப்பில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த வாரம் சமுர்த்தி உதவி பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெற்றுவந்த அனைவருக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாத் தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள சுமார் 17ஆயிரம் குடும்பங்களுக்கும் இந்த 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அடுத்த வாரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதோச நிறுவனத்தினூடாக மானிய விலையில் பருப்பு, ரின்மீன், சீனி, பெரியவெங்காயம், கடலைபோன்ற அத்தியவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பொருட்கள் வறிய மக்களைச் சென்றடையும் வகையில் அரச உதவி 5ஆயிரம் ரூபாயினை வழங்கும் இடங்களில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை விட அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர் சங்கம் உட்பட வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலம் ஊடாக, பிரதேச செயலகங்கள் மூலம் சுமார் 41ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற ஒவ்வொன்றும் ஆயிரத்து முன்னூறு ரூபாய் பெறுமதியான பொதிகள் என்பதுடன் இவை பிரதேச செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வருகின்ற மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.