மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு – வைத்தியசாலை ஊழியர்களுக்கு பிடியாணை

0

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இந்த கைது உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 20-11-2020 அன்று தேற்றாதீவு என்னும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 07வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த விபத்தின்போது குறித்த சிறுமி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உடனடி சத்திரசிகிச்சை செய்யவேண்டிய அவசியமிருந்தது.

அதற்காக சீரிஸ்கான் செய்யவேண்டிவதற்கான பரிந்துரைகள் வைத்தியர்களினால் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் கதிரியக்க உத்தியோத்தர்கள் தமது கடமையினை செய்ய தவறியிருந்தனர்.மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சிறுமி சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் தலையில் இருந்து சிந்தியவண்ணம் இருந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 25-11-2020அன்று மட்டக்களப்பு பொலிஸாருக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பணித்திருந்தார்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் சுமார் 08பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றில் பொலிஸாரின் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனை ஆராய்ந்த நீதிபதி சம்பவ தினம் கடமையில் இருந்த சகல கதிரியக்க உத்தியோகத்தர்களையும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.அன்றைய தினம் 15பேர் வரையில் கடமையில் இருந்ததாக மட்டக்களப்ப பொலிஸாரினால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதிவரையில் ஒத்திவைத்த நீதிபதி தண்டனை சட்ட கோவையின் 162வது பிரிவின் கீழ் ஒருவருக்கு வழங்கப்பட்ட கடமையினை செய்ய தவறிய காரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பு என்ற குற்றத்தின் கீழ் அன்று கடமையில் இருந்த கதிரியக்க உத்தியோகத்தர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.