மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் ஐஸ் தொழிற்சாலையில் தீ விபத்து

0

மட்டக்களப்பில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஐஸ் தொழிற்சாலையிலேயே இன்று மாலை இந்த தீசம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஐஸ் தொழிற்சாலை மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு அருகில் 2009ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நிலையில் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் இருந்துவருகின்றது.

இந்த நிலையில் இந்த ஐஸ் தொழிற்சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் தீசம்பவம் ஏற்பட்டிருந்தது.

இன்று மாலையும் பலத்த மழைக்கு மத்தியிலும் இந்த தீ சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீயினை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன் மற்றும் உறுப்பினர்கள் தீயணைக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.