மே மாத ஓய்வூதியம் மற்றும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இன்று முதல்!

0

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் உரித்தாகும் ரூபாய் ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வயோதிபர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபாய் ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

இவர்களுக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தநிலையில் இவர்களுக்கான மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் இன்று ஆரம்பமாகி பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படவுள்ளது.