யாழ் பல்கலை மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்யப்படுகின்ற பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று நடந்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் வட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைத்தளங்கள், செயலிகள் ஊடாக தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அச்சறுத்தலும், பகிடிவதையும் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பத்தவறும் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் மாணவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசாங்கம் இந்த பகிடிவதை விவகாரம் குறித்து முழுமையான கவனம் செலுத்தியிருப்பதுடன் அது தொடர்பில், விரைவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.