யாழ் பொது நூலகம் எரிப்பு – தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!

0

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வலைத்தளங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு நாளையுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் மூன்றாவது தடவையாக 05 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.